Sunday, September 20, 2009

குரங்கு குசலா

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.

எதிரிகள் ஜாக்கிரதை என்று பழைய சினிமா விளம்பரங்கள் பற்றி என்னுடைய பதிவிற்கு வருகை தந்த அனைவருக்கும் உளம் கனிந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள், குறிப்பாக கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கும்.நண்பர்களே, இந்த பதிவின் தலைப்பை பார்த்து யாரும் பயந்து விட வேண்டாம். இந்த காமிக்ஸ் ஸ்டிரிப் தொடர் மனிதர்களை மைய்யமாக கொண்ட ஒன்றாகும்.

ராணி வார இதழ் தினத்தந்தி ஆரம்பித்த காலம்தொட்டே வருவது நம்மில் பலருக்கும் தெரியும். இதனை "வாராந்தரி ராணி, குடும்ப இதழ்" என்றே அழைப்பார்கள். ஆரம்ப காலங்களில் இதன் எடிட்டிங் மிகவும் திறம்பட செய்யப் பட்டு சிறப்பாக வந்தது - அதாவது, தினத்தந்தி படிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் வந்தது. சிறுவர்களுக்கு என்று ஒரு சிறப்பு பகுதி, ஒவ்வொரு வாரமும் ஒரு தொடர் படக் கதை, சிறுவர் சிறுமியருக்கு போட்டிகள் என்று சிறுவர்கள் படிக்க இரண்டு முதல் மூன்று பக்கங்கள் ஒதுக்கப் பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது.

அதில் ஆரம்ப காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு காமிக் ஸ்டிரிப் தொடர் குரங்கு குசலா ஆகும். இது ஒரு சிறுவர் பகுதி ஸ்டிரிப் அல்ல. ஏனெனில் இதில் வந்த கருத்துக்கள் எல்லாமே அரசியல் மற்றும் சமூக சிந்தனைகளை மைய்யமாக கொண்டு அந்த சந்தர்ப்பங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை சார்ந்தே அமைந்து இருக்கும். மேலும் இவர்களின் மூலமாக ராணி நிர்வாகம் தங்களுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தினர்.

rani kurangu kusala 1967

மேலே உள்ள படத்தில் இருக்கும் சம்பவம் 1967இல நடைபெற்றது. மிகவும் புகழ் பெற்று, பர பரப்பாக பேசப் பட்ட ஒரு சம்பவம் ஆகும். அதனை ஒட்டியே இந்த இதழின் குரங்கு குசலா அமைந்து இருந்தது. இந்த புகழ் பெற்ற காமிக்ஸ் ஸ்டிரிப் தொடரை வரைந்தவர் பெயர் வாலி ஆகும். இதற்கான கருத்தை அனேகமாக ஆசிரியர் நிர்ணயித்து இருக்க வேண்டும். சரியாக தெரியவில்லை.

rani kurangu kusala 1969

அரசியல் கருத்துக்களை மட்டும் இல்லாமல் சமூக சூழ்நிலைகளையும் சுட்டிக்காட்ட குரங்கு குசலா தவறவில்லை. இந்த கால கட்டங்களில் தனிக் குடித்தனம் செல்வது மிகவும் பேஷனாக இருந்தது. அவ்வாறு செல்லும் இளைய தலைமுறையினர் சமைப்பதில் ஆரம்பித்து பல சிக்கல்களை அன்றாட வாழ்வில் சந்தித்ததை மைய்யமாக கொண்டே இந்த வார குரங்கு குசலா ஸ்டிரிப் அமைந்து இருந்தது.

rani kurangu kusala 1974

நடுத்தர குடும்பங்களின் இயல்பு வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்ததால் குரங்கு குசலா அறுபதுகளில் அனைவரின் விருப்பமான பகுதியாக அமைந்ததில் வியப்பேதுமில்லை. அனைவரும் இந்த பகுதியை தேடித்பிடித்து படிப்பதை முதல் கடமையாக கொண்டு இருந்தனர்.

அதைப்போல பெரும்பாலான இதழ்களில் சிரிப்பு கொத்து என்று ஒரு பகுதி இருந்தது. அந்த பகுதியில் இந்த படத்தில் இருப்பதைப் போலவே ஆறு சிரிப்புகளை கொண்டு ஒரே விதமாக இருந்தது. இந்த பார்மட் கடைசி வரை மாறவே இல்லை. இதில் மற்றுமொரு விஷயம் என்னவென்றால் இந்த சிரிப்புகளை எழுதியவர் யார் என்றோ அல்லது இந்த படங்களை வரைந்தவர் யார் என்றோ விவரங்கள் கொடுக்கப்படவில்லை.

rani sirippu koththu

ஒவ்வொரு வாராந்தரி ராணி வார இதழிலும் தினத்தந்தி விளம்பரங்கள் வந்துக் கொண்டே இருந்தன. அந்த பழக்கம் இன்றுவரையிலும் மாறவே இல்லை. ஆரம்ப காலத்தில் வந்த விளம்பரங்கள் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதோ ஒரு சாம்பிள். இந்த விளம்பரமே சுமார் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வந்துக் கொண்டு இருந்ததாக நியாபகம்.

daily thanthi ad

இந்த விளம்பரத்திற்கு பிறகு வந்த ஒரு விளம்பரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இந்த விளம்பரத்தின் வாசகங்கள் அருமை தலைவர் விஜய டி. ராஜேந்தர் அவர்கள் எழுதியதோ என்று கூட நான் சில நேரங்களில் நினைப்பது உண்டு. சமீப கால வாசகர்களுக்கு உதாரணம் சொல்வது என்றால் தமிழ்நாட்டு டாரண்டினோ என்று அழைக்கப்படும் பேரரசு கூட இதனைப் போன்ற வாசகங்களை உபயோகிப்பார்.

daily thanthi ad 2

எனக்கு தெரிந்த வரையில் நான்கு ஆண்டுகள் குரங்கு குசலா தொடர்ந்து வந்ததாக நியாபகம். அதற்க்கு பிறகு சில ஆண்டுகள் நாங்கள் வாராந்தரி ராணி, குடும்ப வார இதழை வாங்கவில்லை. அதனால் சரியாக தெரியவில்லை. மன்னிக்கவும்.

அடுத்த பதிவு - சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் நடிக்கும் இயந்திரன் படத்திற்கும் இந்த பதிவுக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லாத ஒன்று. அதனால் திரையுலக நண்பர்கள் அதனை பற்றிய தொடர்பை தேட வேண்டாம்.

Sunday, September 13, 2009

எதிரிகள் ஜாக்கிரதை

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். 


மரண அடி மல்லப்பா பற்றி என்னுடைய அறிமுகப்பதிவிற்கு வருகை தந்த அனைவருக்கும் உளம் கனிந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவில் நாம் ஒரு காமிக்ஸ் ஸ்டிரிப் பற்றி இல்லாமல் அந்த காலத்தில் வந்த சில சினிமா விளம்பரங்களை பார்க்கலாம்.

இந்த காலத்திய விளம்பரங்கள் போல இல்லாமல் அந்த காலத்தில் வந்த சினிமா விளம்பரங்கள் மிகவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தன என்பதற்கு சான்றாக இந்த முதல் விளம்பரத்தை பாருங்கள். ஐம்பதுகளின் முடிவில் வந்த கல்கி இதழில் வந்த விளம்பரம் இது.

madathipathi magal ad

விலாவரியாக வந்த இந்த விளம்பரம் என்னுடைய கருத்தை கவர்ந்த ஒன்றாகும். இந்த விளம்பரத்தை மறுபடியும் பாருங்கள். அதில் எழுதப் பட்டு இருக்கும் வசனங்களை உற்று படியுங்கள். அற்புதமான வசனங்கள். இந்த விளம்பரத்தின் ஸ்கிரிப்ட்'ஐ எழுதியவருக்கு பாராட்டுக்கள். அதனைப் போலவே இந்த படத்தில் நடித்தவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவுமே கொடுக்கப் படவில்லை (ஒருவேளை புது முகங்களோ?).

மற்றுமொரு கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவெனில் லேடி = ஸ்திரி என்றும் ஜென்டில்மேன் = புமான் என்றும் விளிக்கப் பட்டு இருப்பது. ஸ்திரி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த புமான் என்ற வார்த்தையை நான் இப்போது தான் முதல் முறையாக கேள்விப் படுகிறேன்.

கடவுளர்களை பற்றி அந்த காலத்தில் வந்த படங்கள் அதிகம் (குறிப்பாக திருவிளையாடல் போன்ற படங்கள்). அதில் நான் இதுவரையில் கேள்விப் படாத படம் இந்த குமார சம்பவம்.

kumara sambavam ad

அந்த காலத்தில் எந்த ஸ்டுடியோவில் எடுக்கப் பட்டது என்று குறித்த விவரங்கள் அனைத்து விளம்பரங்களிலும் வந்து கொண்டே இருந்தது. இந்த விளம்பரமும் அதற்க்கு விதி விலக்கல்ல. இந்த விளம்பரத்தில் நட்சத்திர பட்டாளமே இருந்ததால் அவர்களைப் பற்றிய விவரமும் இருந்ததை பாருங்கள். ஜெமினி கணேசன் என்று இல்லாமல் கணேஷ் என்று இருப்பதையும் கவனியுங்கள்.

இந்த படத்தின் டைட்டில் லோகோ'வை பாருங்கள். காமிக்ஸ் கதைகளுக்கு உள்ளது போல வரையப் பட்டு இருக்கிறது. ஏனோ வைரஸ் எக்ஸ் (முத்து காமிக்ஸ் காரிகன் கதை) அட்டைப் படம் நினைவுக்கு வருகிறது.

edhirigal jaakkiradhai ad

ராணி இதழில் இந்த கதையை பற்றி வந்த விமர்சனத்தை படியுங்கள். வழமை போல சொத சொத விமர்சனம் தான்.

edhirigal jaakkiradhai review

நாம் அனைவருக்கும் தெரிந்த பாலசந்தர் படமாகிய பாமா விஜயம் குறித்த விளம்பரம் இதோ:

baamaa vijayam ad

இந்த விளம்பரத்தை நன்றாக பாருங்கள். போட்டோ வுடன் ஓவியர் ஒருவர் வரைந்த விளம்பரம் இது. வரைந்தவர் பெயர் தெரியவில்லை (இந்த விடயத்தில் வல்லவர் ஆகிய நண்பர் ஒருவரிடம் கேட்டு இருக்கிறேன் - பார்க்கலாம்- மேற்கொண்டு விவரங்கள் தெரிந்தால் அப்டேட் செய்கிறேன்). இந்த படத்தை பற்றிய ராணி விமர்சனம் இதோ:

baamaa vijayam review

ஜெமினி கணேசன் அவர்கள் புகழ் பெற்ற பிறகு வந்த படம் இது. ஆனால் அவர் பெயர் இதில் இல்லை. ஆனால் அதைப் பற்றி எல்லாம் பெரிய சம்பவம் எதுவும் நடக்க வில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், இப்போது என்னடாவென்றால் தசாவதாரம் படத்தில் ஐந்து நிமிடம் கூட வராத ஒரு பாத்திரத்தில் நடித்த நெப்போலியன் அவர் பெயரையும் படத்தையும் போஸ்டரில் போடா வில்லை என்று பிரச்சினை செய்கிறார். என்ன கொடுமை சார் இது?

thapaalkaran thangai

இந்த விளம்பரத்திலும் கூட ஸ்டுடியோ பெயர் இருப்பதை பாருங்கள். இந்த படத்தின் பெயர் கூட ரைமிங் ஆக இருக்கிறது. தானா'வுக்கு தானா.

வாத்தியார் நடித்து வந்த படங்களை பற்றிய விளம்பரங்களை இட வில்லை என்றால் குற்றமாகி விடும் என்பதால் இதோ தலைவர் நடித்த இரண்டு விளம்பரங்கள்:

maattukkaara velan ad

ஈஸ்ட்மேன் கலர் என்பது தெரியும், ஜெமினி என்பது ஸ்டுடியோ ஆகவே இருக்க வேண்டும். தலைவர் தான் புரோடியுசர் போல இருக்கிறது.

kaavalkaran ad

அப்போதே இப்படி எல்லாம் ரமணா விஜயகாந்த் மாதிரி விவரங்களை எல்லாம் கொடுத்து விளம்பரம் செய்து இருக்கிறார்கள். இந்த படத்தை பாத்தா பெண்கள் விவரம் இதோ: அது எப்படி சார் தியேட்டர் வாசலில் நின்று எண்ணி இருப்பார்களோ?

ஹீரோ யார், நடிகை யார் என்று கூட குறிப்பிடாத இந்த ஜீவநாடி விளம்பரத்தை பாருங்கள்.

jeevanaadi ad

சாந்தி தியேட்டர் டீலக்ஸ் ஏர் கண்டீஷன் என்று கூறப் பட்டு இருக்கிறதை நன்றாக கவனியுங்கள். அந்த காலத்தில் இப்படி பட்ட வசதிகள் கொண்ட தியேட்டர்கள் மிகவும் குறைவு. அதனால் தான் இப்படி எல்லாம் விளம்பரத்திலேயே குறிப்பிட வேண்டி இருந்தது.

வாத்தியார் படம் பற்றி கூறிவிட்டு சூப்பர் ஸ்டார் படம் பற்றி கூறாவிட்டால் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் இதோ தலைவரின் மூன்று முகம் விளம்பரம்.

moonru mugam ad

இப்போது ஒரு விடயம் புரிந்து விட்டது. ஜெமினி என்பது கலர் புராசசிங் நிலையம் ஆகும் என்பதே அது.

இந்த விளம்பரங்களில் முக்கால்வாசி எலேகன்ட் என்ற விளம்பர நிறுவனம் மூலமாக விநியோகம் செய்யப் பட்டு உள்ளது தெரிகிறது. அதைப் போலவே சில விளம்பரங்களில் அதனை டிசைன் செய்தவர் விவரமும் உள்ளதை பாருங்கள் (தீனதயாள், லக்ஷ்மி).

காமிக்ஸ் ஸ்டிரிப் பற்றிய பதிவு அடுத்த பதிவில் தொடரும்.

சிறப்பு பின்குறிப்பு:

காமிக்ஸ் பிரியன் said... லேட்டஸ்ட் நடிகர்கள் தனுஷ், சிம்பு விளம்பரங்கள் எங்கே? என்று கேட்ட இந்த கேள்விக்காக இந்த சிறப்பு பின்குறிப்பு. சிம்பு ரசிகர்கள் மன்னிக்கவும்.

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் நன்னாளில் நடிகர் சிம்பு நடித்த காளை என்ற படம் வெளிவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த படம் வெளிவந்த சிறிது நாளில் (பிப்ரவரி மாதம் முதல் வாரம்) மதுரை எடிஷன் தினகரன் செய்தி தாளில் இந்த விளம்பரம் வந்தது.

kalai shit

இந்த விளம்பரத்தில் ஹிட் என்ற வார்த்தைக்கு பதிலாக ஷிட் என்று தவறாக டைப் செய்து கொடுத்தார் அந்த லோக்கல் விநியோகஸ்தர். அதனையும் கவனிக்காமல் வெளியிட்டு விட்டனர். ஆனால், பாவம், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முரட்டுக் காளை படத்தையும் போகிற போக்கில் ஷிட் என்று கூறியது தான் கொடுமை.

படங்கள் மற்றும் கருத்து உதவி: தமிழ் காமிக்ஸ் உலகின் தலைவர்.

Friday, September 4, 2009

மரண அடி மல்லப்பா

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.

ஒரு விளையாட்டாக தான் நான் கமெண்ட் போடவே ஆரம்பித்தேன். பின்னர் அந்த காமிக்ஸ் மேல் உள்ள ஈர்ப்பினால் ஒரு காமிக்ஸ் பற்றிய பிளாக் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தேன். பல மாதங்களாக நினைத்துக் கொண்டே இருந்தேன். எப்படி நம்முடைய பதிவுகளை இடலாம் என்று. பின்னர் இந்த தளத்தையே ஒரு சித்திரங்களுக்கான உறைவிடமாக மாற்றினால் என்ன என்று தோன்றியது. தற்போது நண்பர் சாத்தான் அவர்கள் அப்படித்தான் செய்து வருகிறார். அவருக்கு துணையாக ஏதோ நாமும் நம்மால் ஆனதை செய்வோம் என்று துணிந்து களத்தில் குதித்து உள்ளேன். கடவுள் நம்மை கை விட்டாலும், காமிக்ஸ் ரசிகர்கள் கை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்று இந்த புதிய இன்னிங்க்சை ஆரம்பிக்கிறேன்.

ஒரு காலத்தில் வெறும் அட்டைப் படங்களை மட்டுமே ஸ்கான் செய்து பதிவுகளை இட்டுக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் "காமிக்ஸ் பிளாக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று புது வழிக்கு கொண்டு சென்ற அருமை நண்பர் கிங் விஸ்வா அவர்கள், பல காமிக்ஸ் தளங்கள் தோன்ற காரணமாக இருந்தார். அவருக்கு என்னுடைய இந்த பிளாக்கின் முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, தமிழில் காமிக்ஸ் பிளாக் ஆரம்பிக்க காரணமாக இருந்த காமிக்ஸ் உலகின் முன்னணி நாயகன் டாக்டர் செவன் அவர்களுக்கும் மரியாதையை செலுத்துகிறேன்.

இந்த காமிக்ஸ் பிளாக்கில் நீங்கள் முழு காமிக்ஸ் எதனையும் எதிர்பார்க்க வேண்டாம். இங்கே உங்களுக்கு காணக் கிடைக்காத படங்களும், காமிக்ஸ் பற்றிய குறிப்புகளும், நான் ரசித்த கதைகளும் அதனை சார்ந்த தகவல்களுமே உங்களுக்கு இங்கு கிடைக்கும். அதனால் இதனை ஒரு மொக்கை பிளாக் என்று யாரும் தவிர்த்து விட வேண்டாம். உங்களின் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களும், நீங்கள் இதுவரை கேள்விப் பட்டே இராத காமிக்ஸ் மற்றும் சித்திரக் கதை களஞ்சியங்களை பற்றிய தகவல்களும் உங்களுக்காக இங்கே விருந்தாக படைக்கப் படும்.

முதல் பதிவின் தலைப்பை பார்த்து பலரும் பயந்து பொய் இருக்கலாம். இது என்ன ஒரு கொடுரமான ஒரு கொலைகாரனை பற்றிய கதையா என்று. தலைப்பை பார்க்கும் புதிய வாசகர்கள் யாவருக்கும் அப்படித்தான் தோன்றும். ஆனால் நெடுநாளைய குமுதம் வாசகர்கள் அனைவருக்கும் இந்த பெயர் ஒரு புகழ் பெற்ற பெயராகும்.

தற்போது குமுதம் வாங்குபர்கள் படிக்கும் முதல் விஷயம் எது? (லயன், முத்து காமிக்ஸ் என்றால் எடிட்டரின் ஹாட் லைன் மற்றும் காமிக்ஸ் டைம் என்று கூறலாம்). அனேகமாக அரசு பதில்கள்? ஞானியின் ஒ பக்கங்கள்? சுனிலின் சினிமா பக்கங்கள்? ஆறு வித்தியாசங்கள்? சினிமா விமர்சனம்? யாராலும் மெஜாரிடியாக கூற முடியாத ஒரு விஷயம் (இந்த மெஜாரிட்டி, மைனாரிட்டி விஷயமே நமக்கு வேண்டாம்ப்பா - அதை எல்லாம் அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள்).

ஆனால், எழுபதுகளில் அறுபதுகளின் முடிவில் (1968-1969) வந்த குமுதம் இதழ்களில் நானும் என்னுடைய பள்ளி நண்பர்கள் அனைவரும் படிக்கும் முதல் விஷயமே இந்த மரண அடி மல்லாப்பா சீரிஸ் தான். என்ன கொடுமை என்றால் இதனை வரைந்தவர் யார், தொடருக்கு கதையை அமைத்தவர் யார் என்ற விஷயங்கள் எதுவுமே எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் அதனை Comment ஆக கூறினால் அகம் மகிழ்வேன்.

 

M A M 1A M A M 1B

மரண அடி மல்லப்பா அந்த அளவுக்கு எங்களின் மனதை கவர்ந்தவன் ஆவான். நம்மில் பலருக்கு சிறு வயதில் அதி மேதை அப்புவை பிடித்து இருக்கும், பலே பாலுவை பிடித்து இருக்கும். அதற்கெல்லாம் காரணம் அவர்கள் யாருமே ஹீரோக்கள் அல்ல. அவர்கள் நம்மைப் போல ஒரு சராசரி சிறுவர்களே என்பது தான். அவர்களும் தோற்பார்கள், அடி வாங்குவார்கள், ஆனால் அவற்றை எல்லாம் எப்படி தாங்கிக் கொண்டு செல்கிறார்கள் என்பதே இந்த கதைகளின் வெற்றிக்கு ரகசிய காரணமாக் அமைந்தது.

 

M A M 2A M A M 2B

இந்த வகையில் பார்த்தால் மரண அடி மல்லப்பா நம்மில் ஒருவராக இருந்ததே எங்களுக்கு இந்த கதை தொடர் பிடிக்க காரணமாக அமைந்தது. என்னதான் அவர் ஒரு மாமிச மலை போல தோற்றம் அளித்தாலும் உள்ளத்தில் அவர் இன்னமும் ஒரு சிறுவர்தான் (நம்முடைய ஷேரிப் டாக் புல் போல) என்பதையே இந்த தொடரில் வந்த கதைகள் அனைத்தும் பறை சாரும். . அதற்க்கு மற்றுமொரு உதாரணம் இதோ:

M A M 3A M A M 3B

இப்படியாக பலரின் மனதை கவர்ந்த மரண அடி மல்லப்பாவின் சாகசங்கள் தொடரும் என்று சொல்லிக் கொண்டு இந்த அறிமுகப் பதிவை முடித்துக் கொள்கிறேன். இது வெறும் அறிமுகப் பதிவு என்பதால் சிறிய அளவிலேயே படங்கள் உள்ளன. அடுத்தடுத்த பதிவில் பல படங்கள் வந்து உங்களின் மனதை கொள்ளை கொள்ளும் என்று உறுதி அளிக்கிறேன்.

நன்றி, வணக்கம்.

பின் குறிப்பு: இந்த தொடரைப் பற்றிய சரியான தகவல்களையும் மேலும் பல அறிய ஸ்கான்'களையும் அளித்து உதவிய "வலை மன்னன்" அவர்களுக்கு நன்றி.

இந்த தொடர் 1968ம ஆண்டு குமுதம் இதழில் ஆரம்பிக்கப் பட்டது. சிறப்பாக சென்ற இந்த தொடர் மரண அடி மல்லப்பாவின் மகன் பிறந்ததும் இன்னமும் பலரால் ரசிக்கப் பட்டது, குறிப்பாக குழந்தைகளும் ரசிக்க ஆரம்பித்தனர். வெகு விரைவில் ஜூனியர் மரண அடி மல்லப்பாவை நம்முடைய பதிவில் கண்டு ரசிக்கலாம்.